நாமக்கல் மாவட்டத்தில் காவல் துறை மூலம் முன் நடத்தை சரிபார்ப்பு இணையதள சேவை துவங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தெரிவித்தது, தமிழக காவல் துறை காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவை (பி.வி.எஸ்) என்ற இணையவழி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. தனிநபர் விவரம், வேலை நிமித்தம், வாடகைதாரரின் விவரம், வீட்டு வேலையாள்கள் விவரம் சரிபார்ப்பு சான்று பெற www.eservices.tnpolice.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
தனிநபர் விண்ணப்பத்துக்கு ரூ.500, தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.1,000 ஆன்லைனில் செலுத்தலாம். காவல் துறை வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் நபர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா என்ற விவரம் சரிபார்க்கப்படும். தமிழ்நாட்டில் வசிப்பவர்களின் விவரம் மட்டுமே சரிபார்க்கப்படும். விண்ணப்பம் பெறப்பட்ட 10 நாள்களுக்குள் முன் நடத்தை சரிபார்க்கப்பட்டு சான்று வழங்கப்படும். இணையளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அறிக்கை நகல் விண்ணப்பதாரரின் மின்னஞ்சலில் அனுப்பப்படும். (பி.வி.எஸ்) விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தின் நிலையை அறியலாம். அளிக்கப்படும் விவரம் மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதற்கான கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்பட மாட்டாது என்றார்.