தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 3 ஆம் இடம் பெற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வீரர்களை ஆட்சியர் ச.நடராஜன் பாராட்டினார்.
வரும் 2021-இல் நடைபெறும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களைத் தேர்வு செய்வதற்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பஞ்சாப் மாநிலத்தில் நவ. 19 முதல் 24 ஆம் தேதி வரை புளோர் ஹாக்கி போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழக அணி 3-ஆம் இடத்தைப் பிடித்தது. மதுரை பெத்சான் பள்ளியைச் சேர்ந்த ஹரிகரசுதன், சூர்யா, முகேஷ்சுந்தர், கமலேஷ் ஆகியோர் தமிழக அணியில் இடம் பெற்றிருந்தனர்.
இதேபோல், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற புளோர்பால் போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழக அணி 3-ஆம் இடம் பெற்றது. இந்த அணியில் மதுரை அன்பகம் சிறப்புப் பள்ளியைச் சேர்ந்த கே.பவித்ராதேவி, கே.கீதா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகளை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் திங்கள்கிழமை பாராட்டினார்.