மதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபானக்கடை பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் மற்றும் மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
மதுரை கூடல்புதூர் பகுதியில் மதுபானக்கடை இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விற்பனை முடிந்த நிலையில் ஊழியர்கள் கடையை அடைத்து விட்டுச்சென்றனர். திங்கள்கிழமை காலை கடையை திறக்கச்சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கடை ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1.50 லட்சம் மற்றும் 64 மதுபாட்டில்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கடையின் மேற்பார்வையாளர் செல்வராஜ்(44) கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி வந்த போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.