மதுரை ஜெயிலர் ஜெயபிரகாஷ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதி சையது ஜாபர் அகமது (42) புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
கோவை, உக்கடம் என்.எச்.சாலையைச் சேர்ந்தவர் ஜெப்ரு என்கிற சையது ஜாபர் அகமது (42). இவர், மதுரை ஜெயிலராக இருந்த ஜெயபிரகாஷ் என்பவரை 1997ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்.
இதனிடையே, கோவை குண்டுவெடிப்பு வழக்கிலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் சையது ஜாபர் அகமது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சையது ஜாபர் அகமது மீதான ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டது. எனினும், மதுரை ஜெயிலர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் அவர் மத்திய சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அண்ணா பிறந்த நாளை ஒட்டி நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில், நீண்ட நாள்களாக சிறையில் இருந்து வருவதால் தன்னை விடுவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சையது ஜாபர் அகமது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
மேலும், கொலைக் குற்றத்தின் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், வெடிபொருள் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படாததால் அவரை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அவரைத் தமிழக அரசு விடுதலை செய்யவில்லை. இந்த நிலையில், தமிழக மனித உரிமை ஆணைய உறுப்பினர் கோவை சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் உயர் நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டும், தமிழக அரசு விடுவிக்க மறுக்கிறது என்று அகமது மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், சையது ஜாபர் அகமதுவை விடுதலை செய்ய உத்தரவிட்டார். ஆனால், அதன் பிறகும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதன் பிறகும் அவர் விடுதலை செய்யப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அகமதுவின் சகோதரி நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நிலையில், கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சையது ஜாபர் அகமது புதன்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென விடுதலை செய்யப்பட்டார்.