மதுரை ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வியாழக்கிழமை இரவு மர்மநபர்கள் அழைப்பு விடுத்து, மதுரை விமான நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் சிறப்புப் பிரிவினர் ரயில் நிலையம் விரைந்தனர். இதையடுத்து மதுரை ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சரக்கு ஏற்றும் பிரிவு, காத்திருப்பு அறை, பயணச்சீட்டு மையம், மருத்துவமனை வளாகம், ரயில்வே பணிமனை, வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறியதாவது: மதுரை ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில், மேற்கு நுழைவு வாயில் உள்ளிட்ட அனைத்து இடங்களில் பாதுகாப்பு படையினர் மூலம் சோதனை நடத்தப்பட்டது. பாண்டியன் ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில்களிலும் சோதனை நடத்தப்பட்டது. பயணிகளின் உடமைகள் ஸ்கேனர் கருவிகள் மூலம் சோதனையிடப்பட்டது. ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றனர். போலீஸார் நடத்திய சோதனையின் மூலம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.