மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
178 இடங்களில் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அவை உடனடியாக அகற்றப்பட்டன. கொட்டாம்பட்டி, மேலூர் ஊராட்சி ஒன்றியங்களில் 12 வீடுகள் சேதமடைந்தன. 117 இடங்களில் மின் கம்பங்கள் முறிந்தும், பெயர்ந்தும் விழுந்தன.
கிளைகள் விழுந்ததில் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து சேதமடைந்தன. இவைகளை மின்வாரியத்தினர் கொட்டும் மழையில் விரைந்து சீரமைத்தனர். சருகுவலையப்பட்டி, அ.வல்லாளபட்டி. அரிட்டாபட்டி, எட்டிமங்கலம், கீழவளவு பகுதிகளில் 45 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு,வாழை, மற்றும் நெல்பயிர் சேதம் அடைந்துள்ளன.
இவற்றை வருவாய்த்துறையினர் மதிப்பிட்டு வருகின்றனர். கொட்டாம்பட்டி பாலாற்றில் நீண்டகாலத்துக்குப் பின்னர் மழை நீர் பெருக்கெடுத்து பாய்ந்தது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை மேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் ஆ.சிவகாமி மற்றும் வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் பார்வையிட்டு மேற்கண்ட தகவல்களை தெரிவித்தனர்.