மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திங்கள்கிழமை இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் பலத்த காயமடைந்தனர். 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வயலூர் வைரவநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (25). இவருக்கும், இவரது உறவினர் பெண்ணை கிண்டல் செய்தது தொடர்பாக சிந்தாலக்கரை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (22) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், திங்கள்கிழமை ரஞ்சித்குமார், தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு வந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் வந்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த ரஞ்சித்குமார், கார்த்திக் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக இருவரும் அளித்த புகாரின்பேரில் இருதரப்பையும் சேர்ந்த 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், இதில் 5 பேரை கைது செய்தனர்.