மதுரை ஊரகப் பகுதிகளில் திருடுபோன 46 செல்லிடப்பேசிகள் உரிமையாளர்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
மதுரை ஊரகப்பகுதிகளில் செல்லிடப்பேசி திருட்டு மற்றும் வங்கி அதிகாரிகள் போல பேசி வாடிக்கையாளர்களின் ஏடிஎம் ரகசிய எண்களை பெற்று பண மோசடியில் ஈடுபடுவது உள்ளிட்ட சைபர் குற்றங்களை தடுக்க ஊரகக் காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சைபர் கிளப் தொடங்கப்பட்டது. இதையடுத்து சைபர் கிளப் போலீஸார் மதுரை ஊரக பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் திருடு போன ரூ.4.97 லட்சம் மதிப்பிலான 46 செல்லிடப்பேசிகளை மீட்டனர். இதே போல பண மோசடிகளில் தொடர்புடைய குற்றவாளிகளை தொழில்நுட்ப உதவியுடன் கைது செய்து அவர்களிடம் இருந்து. ரூ.1.25 லட்சம் மீட்கப்பட்டது.
இந்நிலையில் மதுரை ஊரகக்காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் பங்கேற்று, 46 செல்லிடப்பேசிகள் மற்றும் ரூ.1.25 லட்சத்தை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
இதில் செல்லிடப்பேசி உரிமையாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.