மதுரையில் கடைக்கு சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் பறித்துச்சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை கோ.புதூர் பரசுராம்பட்டி கங்கா நகரைச் சேர்ந்த துரைப்பாண்டி மனைவி சாந்தி(51). இவர் அப்பகுதியில் கடைக்குச் சென்று விட்டு செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அங்குள்ள சிலோன் காலனியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக சாந்தி அளித்தப் புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.