தமிழக சிறைத்துறை காவலர்களுக்கான பதவி உயர்வு தகுதித்தேர்வு மதுரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள மத்தியச் சிறைகளில் முதல்நிலை காவலர்களாக பணிபுரிபவர்களில் தகுதியானவர்களுக்கு முதல்நிலை தலைமைக்காவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இதற்கான தகுதித் தேர்வு மதுரை மத்திய சிறை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் ஜெயபாரதி தலைமையில் தேர்வுக்குழு உறுப்பினர்கள் அறிவுடைநம்பி(கோவை சிறை டிஐஜி), பழனி(மதுரை சிறை டிஐஜி) , எஸ்.சண்முகசுந்தரம்(திருச்சி சிறை டிஐஜி) ஆகியோர் தேர்வை நடத்தினர்.
இரண்டு நாள்கள் நடைபெறும் தகுதித்தேர்வில் சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, வேலூர் , கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள மத்தியச் சிறைகளில் பணிபுரியும் 150 முதல்நிலை காவலர்கள் பங்கேற்கின்றனர். முதல் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தகுதித்தேர்வில் 75 காவலர்கள் பங்கேற்றனர்.
இரண்டாம் நாளான புதன்கிழமை நடைபெறும் தகுதித்தேர்வில் 75 காவலர்கள் பங்கேற்கின்றனர். தகுதித்தேர்வில் பங்கேற்றவர்களுக்கு, கவாத்து, வாய்மொழி தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வுகளும் நடைபெற்றது. இத்தேர்வுகளில் தகுதி பெறும் 123 காவலர்களுக்கு முதல்நிலை தலைமை காவலர்களாக பதவி உயர்வு வழங்கப்படும். தேர்வுக்கான ஏற்பாடுகளை மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.