தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியர்கள் தங்களது உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க, ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் மூலமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 88 ஆயிரம் பேர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கான ஓய்வூதியம் வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யப்படுகின்றன. ஓய்வூதியதாரர்களில் பெரும்பாலானோர் தங்களது மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்காமல் உள்ளனர். இதனால் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தின் மூலம் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியவில்லை.
இப்பிரச்னையைத் தீர்க்க வங்கிகளில் உயிர்வாழ் சான்றிதழ் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, இதுவரை உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் இந்த வசதியைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
கடந்த ஜனவரி முதல் ஓய்வூதியம் பெறாதவர்கள், தங்களது உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையை ஆதார் அட்டை, ஆதார் அட்டையில் பதிவு செய்துள்ள தொடர்பு எண்ணுக்குரிய செல்லிடப்பேசியுடன் அணுகலாம்.
மதுரை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.