உசிலம்பட்டியில் திருமண மண்டபங்கள் முன் அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதை தடுப்பது குறித்து திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் காவல் துறையினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் ஆய்வாளர் மாடசாமி தலைமையில் நடைபெற்றது. சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் உசிலம்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்கள் 34 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காவல் ஆய்வாளர் மாடசாமி பேசியது: அனைத்து மண்டபங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். உசிலம்பட்டியில் அதிக அளவில் பட்டாசு வெடிப்பதை குறைக்க வேண்டும். இதற்கு மண்டப உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் சுப நிகழ்ச்சி தேதி குறிப்பிட்டு அதற்கான அனுமதி சான்று பெற்று வரச் சொல்லுங்கள்.
அவர்கள் காவல் நிலையத்திற்கு வரும்போது நிகழ்ச்சி நடைபெறும் அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது. விளம்பர பதாகை வைக்க அனுமதி இல்லை என்பதை எடுத்துக் கூறி அவர்களிடம் ஒப்புதல் கையெழுத்து வாங்கி கொண்டு அனுமதி சீட்டு கொடுக்கப்படும். அதன் பின்னர் மண்டப உரிமையாளர்கள் முன்பணம் வாங்கிக் கொள்ளுங்கள். இதனையும் மீறி மண்டபம் முன் பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்.