மதுரை மாவட்டத்தில் உள்ளஅனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் சேர்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 23) நடைபெறுகிறது.
வரும் 2019 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி செப்டம்பர் 15-இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப் பட்டியல் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பதினெட்டு வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்கள், பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்கவும், நீக்கம், திருத்தம் செய்யவும், சட்டப்பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்கும் வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்கள், வாக்குச்சாவடிகளில் விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
மேலும், வாக்காளர் சேர்க்கை தொடர்பாக மாவட்டத்தில் உள்ள 420 ஊராட்சிகளிலும், சனிக்கிழமை (செப்.22) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். அதைத்தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (செப். 23) வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றத்துக்கான விண்ணப்பங்கள் அளிக்கலாம்.