தமிழகத்தில் சட்டப்படியான நடவடிக்கைகளில் யாருக்கும் பாரபட்சம் காட்டப்படவில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
மதுரையில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமை ஞாயிற்றுக்கிழமை காளவாசல் பகுதியில் உள்ள பள்ளியில் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் தன் கடமையை சரியாகச் செய்துவருகிறது என முதல்வரே கூறியுள்ளார்.
இதில் யாருக்கும் பாரபட்சம் காட்டப்படவில்லை. சட்டத்துக்கு உள்பட்டே அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கருணாஸ் எம்.எல்.ஏ. மீதான வழக்கிலும் சட்டம் தனது கடமையைச் செய்திருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னையில் அதை திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் முடிவாக உள்ளது. மக்களின் உணர்வுகளுக்கே மதிப்பளித்து அதிமுக அரசு துணை நிற்கும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் ஏன் வழக்குத் தொடுக்கவில்லை? குறிப்பாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழுவை எதிர்த்து திமுக சார்பில் வழக்குத் தொடரவில்லை என்பதையும் பார்க்கவேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் திமுகவின் அணுகுமுறை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றார்.