தமிழ்நாடு பொன்விழாவில் அமைச்சர் உள்பட 7 பேருக்கு விருது

உலகத் தமிழ்ச்சங்கம், தமிழர் கலை இலக்கிய மையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்ற

உலகத் தமிழ்ச்சங்கம், தமிழர் கலை இலக்கிய மையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு பொன்விழா நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உள்ளிட்ட 7 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய பொன் விழாக்கள் தற்போது பல்வேறு அமைப்புகளால் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழர் கலை இலக்கிய மையம் சார்பில் மதுரை உலகத் தமிழ்ச்சங்க பெருந்திட்ட வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு பொன்விழாவானது கவியரங்கம், நூல்கள் வெளியீடு, பாராட்டரங்கம் என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
இலக்கிய மையத்தின் தலைவர் பாரதிசுகுமாரன் தலைமையில் எங்கள் தமிழ்நாடு எனும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த 186 பேர் கவிதை பாடினர். பின்னர் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு பொன்விழா மற்றும் தர்ஷினிமாயா எழுதிய அமிர்த துளசி ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன் தலைமை வகித்து நூல்களை வெளியிட, தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் க.பசும்பொன் நூல்களின் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்.
மாலையில் நடைபெற்ற நாட்டியரங்கத்துக்கு பின்னர் உலகத்தமிழ்ச்சங்க இயக்குநர் கா.மு.சேகர் தமிழ் இலக்கியம் குறித்து சிறப்புரையாற்றினார். பின்னர் நடைபெற்ற பாராட்டரங்கத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கவிதைப் போட்டியில் வென்ற 5 பேருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்.
 நிகழ்ச்சியில் தமிழர் கலை இலக்கிய மையம் சார்பில் அதன் தலைவர் பாரதிசுகுமாரன் சிறப்பு விருதுகளை வழங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு அம்மா விருதும், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவனுக்கு பேரறிஞர் அண்ணாவிருதும், ஆவடிக்குமாருக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., உலகத்தமிழ்ச்சங்க இயக்குநர் கா.மு.சேகருக்கு நற்றமிழ் நாயகர், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் க.பசும்பொன்னிற்கு உலகத்தமிழர் தியாகதுருகம் மற்றும் எழுத்தாளர் தர்ஷிணிமாயாவுக்கு தமிழ்க்கதை செம்மல் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. 
விருது வழங்கும் நிகழ்ச்சியில் விழாக்குழு கவிஞர்கள் ஜீவா காசிநாதன், நா.பாண்டுரங்கன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலை எம்.ராஜா மற்றும் மதுரை மத்திய கூட்டுறவு சங்கத் தலைவர் தங்கம், எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com