கடன் பெற்ற விவசாயிகளுக்கு எதிராக செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, மத்திய அரசு பதிலளிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் உள்ள தேசிய, தனியார் வங்கிகளில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான விவசாய உபகரணங்கள் வாங்கவும், விவசாயம் செய்வதற்கும் கடன் பெறுகிறார்கள். இதற்காக விவசாயிகளிடம் இருந்து வெற்று காசோலைகளை வங்கிகள் பெற்றுக் கொள்கின்றன. விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை பல நேரங்களில் உரிய நேரத்தில் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதையடுத்து அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சமரச பேச்சு நடத்தலாம். ஆனால் கடன்தொகைக்காக விவசாயிகளை வங்கிகள், பல்வேறு வகையில் தொந்தரவு செய்து வருகின்றன. குறிப்பாக, கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட செலாவணி முறிச் சட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள வங்கியில் பெறப்பட்ட கடனுக்கு, கொல்கத்தா நீதிமன்றத்தில் வங்கி சார்பில் வழக்கு தொடரப்படுகிறது. இதனால் கடன் பெற்ற விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
எந்த வங்கிக் கிளையில் கடன் பெறப்பட்டதோ, அந்த வங்கிக் கிளைக்கு அருகில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது தான் முறை. எனவே, செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வது செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய நிதித்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.