அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் மாசி பெளர்ணமியையொட்டி தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அழகர்கோவில் அருகிலுள்ள பொய்கைக் கரைப்பட்டியில் மண்டூகதீர்த்தம் என்ற தெப்பக்குளம் உள்ளது. ஆண்டுதோறும் மாசி பெளர்ணமியில் இங்கு தெப்பத் திருவிழா நடைபெறும்.
இதையொட்டி இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சுந்தரராஜப்பெருமாள் பல்லக்கில் அழகர்கோவிலில் இருந்து காலையில் புறப்பட்டார். வழிநெடுகிலும் திருக்கண் மண்டபங்கள் அமைத்து பக்தர்கள் வரவேற்றனர்.
பொய்கைக்கரைப்பட்டி கிராமத்துக்கு விஜயம் செய்த பெருமாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளினார்.
பின்னர் குளக்கரையில் வலம் வந்து கிழக்கு கரையில் அமைக்கப்பட்டிருந்த திருக்கண் மண்டபத்தில் காட்சியளித்தார். அங்கு பிற்பகல் வரை பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதில் கள்ளழகர் கோவில் அலுவலர்கள் மற்றும் வெளியங்குன்றம் ஜமீன்தார் புலிக்கேசிபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலையில் மீண்டும் குளக்கரையில் வலம் வந்து இரவு அழகர்கோவிலை வந்தடைந்தார்.
அதிர்வெடிகள் முழக்க பொய்கைக்கரைப்பட்டியில் இருந்து பக்தர்கள் கள்ளழகரை வழியனுப்பி வைத்தனர்.