உசிலம்பட்டி அருகே திங்கள்கிழமை அரசு பேருந்து மோதியதில் பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர் உயிரிழந்தார்.
ராஜபாளையம் பகுதிலிருந்து 40-க்கும் மேற்பட்டோர் பாதயாத்திரையாக பழனி முருகன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ராஜபாளையம் அருகேயுள்ள வாகைக்குளம்பட்டியைச்சேர்ந்த மாரியப்பபிள்ளை மகன் கந்தவேல்(42) உசிலம்பட்டி அருகே பேரையூர் சாலை சமத்துவபுரம் அருகே திங்கள்கிழமை அதிகாலை நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ராஜபாளையத்திலிருந்து தேனியை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கந்தவேல் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அதே பேருந்தில் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கந்தவேல் உயிரிழந்தார். இது குறித்து உசிலம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.