திருமங்கலத்தை அடுத்த புதுப்பட்டி கிராமத்தில் அத்துமீறி நுழைந்தவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதியினர் காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருமங்கலத்தை அடுத்த டி.புதுப்பட்டி கிராமத்தில் பெரும்பாலான ஆண்கள் வெளி நாடுகள் மற்றும் வெளி மாவட்டங்களில் உணவகங்கள் வைத்து தொழில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முனியாண்டி சுவாமி கோயில் விழா, கடந்த இரு தினங்களாக கொண்டாடப்பட்டது. விழா முடிவடைந்த நிலையில் புதன்கிழமை இரவு தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மதுபோதையில் கத்தி, அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் டி.புதுப்பட்டியில் புகுந்து தகராறில் ஈடுபட்டனராம். இதில் புதுப்பட்டியைச் சேர்ந்த சிலர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து புதுப்பட்டியைச்சேர்ந்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட இருவரைப் பிடித்து திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், புதுப்பட்டி கிராமத்தினர் 500- க்கும் மேற்பட்டோர் திருமங்கலம் தாலுகா காவல்நிலையத்தின் முன்பு அமர்ந்து, கிராமத்தில் புகுந்து தகராறில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முற்றுகையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீஸார் அவர்களிடம் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.