மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் தெரிவித்தார்.
தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.
கேட்டுக்கடை பகுதியில் பொதுமக்களிடையே அவர் பேசியது: தேனி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சோழவந்தான் தொகுதி அலங்காநல்லூரில் என்னுடைய முதல் வாக்கு சேகரிப்பை தொடங்குகிறேன். இப்பகுதியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். கடந்த மூன்று மக்களவைத் தேர்தல்களில் இங்கு தேர்தல் பணியாற்றியுள்ளேன். தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு உரிமை கடந்த திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் பறிபோனது. இதற்கு எந்தவித நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. அதிமுக அரசு பதவியேற்றவுடன் ஜல்லிக்கட்டு உரிமையை பெற தொடர்ந்து பல்வேறு சட்டப்போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடைநீக்கப்பட்டது. இதனால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்றார்.
இதில் ஓ.பி.ரவீந்திரநாத்குமாருக்கு ஆதரவாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் கே.மாணிக்கம், ஒன்றியச் செயலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.