தேனி மாவட்டம் கூடலூரில் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஆயுதப்படை காவலர் மற்றும் அவரது தந்தை மீது உத்தமபாளையம் மகளிர் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரியும் கூடலூர் கண்ணகி நகரை சேர்ந்த சந்திரன் மகன் கணேஷ்குமார் (28). இவருக்கும், அதே ஊர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த ராஜா மகள் பெமினா (22) என்பவருக்கும் கடந்த 2014 ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் 22 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் கூடுதலாக 50 பவுன் நகைகள் வேண்டும் என கணவர் மற்றும் மாமனார் கொடுமைப்படுத்தியதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெமினா புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், உத்தமபாளையம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தாமரை வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் கணேஷ்குமார், அவரது தந்தை சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.