தேனி மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கஜா புயல் முன்னேற்பாடுகள் குறித்து வியாழக்கிழமை பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அரசு செயலரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அ.கார்த்திக் ஆய்வு செய்தார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கஜா புயலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முன்னேற்பாடுகள், நிவாரண முகாம்கள், முதல் தகவல் பொறுப்பாளர்கள் நியமனம், மீட்புக் குழுக்கள் ஆகியவை குறித்து மாவட்ட துறை அலுவலர்களுடன் அவர் ஆய்வு நடத்தினார். வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சமூக நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், ஊரக வளர்ச்சித் துறை, பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவ நலப் பணிகள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கல்வித் துறை ஆகியவற்றின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குநர் பா.திலகவதி, வேளாண்மை இணை இயக்குநர் அழகுநாகேந்திரன், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் சரஸ்வதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.மாரிமுத்து, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சேதுராமன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அபிதா ஹனீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.