கஜா புயல் காரணமாக தேனி மாவட்டம் கம்பம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் வெள்ளிக்கிழமை தடை விதித்தனர்.
தேனிமாவட்டம் கம்பம், கூடலூர், ராயப்பன்பட்டி, குமுளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கஜா புயல் எதிரொலியாக வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்தே மழை பெய்தது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதனால் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து மேகமலை வன உயிரின சரணாலயத்தினர், வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதித்தனர். கம்பம், கூடலூர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.