கேரள அரசு வனத் துறை மற்றும் பெரியாறு புலிகள் காப்பகம் சார்பில், தேக்கடியில் சுற்றுலாப் பயணிகளுக்காக அவசர ஊர்தி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ளது தேக்கடி. சர்வதேச சுற்றுலாத் தலமான குமுளி மற்றும் தேக்கடிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது, குமுளியிலிருந்து தேக்கடிக்கு வனத்துறை சார்பில் மட்டுமே சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் இந்த பேருந்தில் மட்டுமே செல்லமுடியும்.
இந்நிலையில், தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அவசர ஊர்திகள் வந்து செல்ல மிகவும் தாமதமாகும்.
இதை கருத்தில்கொண்டு, கேரள அரசு வனத் துறை மற்றும் பெரியார் புலிகள் காப்பகம் சார்பில், அவசர ஊர்தி சேவை சில நாள்களுக்கு முன் தொடங்கப்பட்டது. தேக்கடி பகுதியிலேயே இந்த ஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெரியார் புலிகள் காப்பக அலுவலர் ஒருவர் கூறியது: தேக்கடி ஏரியில் படகு சவாரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவசர காலங்களில் உதவ, வனத் துறை சார்பில் அவசர ஊர்தி சேவை தொடங்கப்பட்டுள்ளது, இதை, சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.