தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியம் சுருளிப்பட்டியில், உலக கழிப்பறை தின விழாவை முன்னிட்டு, தூய்மை பாரத இயக்கம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயரூபி தலைமை வகித்தார். பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.சேகர், என்.பாஸ்கரன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். பேரணி சுருளிப்பட்டியில் உள்ள முக்கிய வீதிகளில் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
இதில், திறந்த வெளியை தவிர்த்து கழிவறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும், குப்பைகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர்களுக்கு கை கழுவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் து.பரஞ்ஜோதி, ஜெயபிரபா ஒருங்கிணைப்பாளர் சண்முகம், மற்றும் ஊராட்சி எழுத்தர்கள், தூய்மை பாரத இயக்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.