முத்துராமலிங்க தேவரை பற்றி அவதூறாக முகநூலில் பதிவிட்ட இளைஞரை கைது செய்யக்கோரி பார்வர்டு பிளாக் கட்சியினர் கம்பம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை இரவு முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக், தென்னிந்திய பார்வர்டு பிளாக், சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில்
திரண்டனர்.
பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரை பற்றி இளைஞர் ஒருவர் அவதூறாக முக நூலில் வெள்ளிக்கிழமை பதிவு செய்ததை கொண்டு வந்து போலீஸாரிடம் காட்டி, அந்த இளைஞரை கைது செய்ய வலியுறுத்தினர்.
அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் சீமைச்சாமி, சம்மந்தப்பட்ட இளைஞரை போலீஸார் தேடி வருவதாக கூறினார்.
ஆனாலும் இளைஞரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கம்பம் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.