தேனி மாவட்டம் கம்பத்தில் மனித நேய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் புகுந்து, மாவட்ட செயலாளரை தாக்கி, அலுவலக பொருள்களை சூறையாடிய இரண்டு இளைஞர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கம்பம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ் (34). இவர் மனித நேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்ட செயலாளராக உள்ளார். இதே கட்சியைச் சேர்ந்த முகமது அபி வக்காஸ் (23), முகமது ஆசிக் (23), சவுகத் என்ற மன்சூர் அலி ஆகிய மூவரின் நடவடிக்கை கட்சிக்கு விரோதமாக இருந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியை விட்டு நீக்கியுள்ளனர்.
இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு கம்பம்மெட்டு சாலையில் உள்ள அக் கட்சி அலுவலகத்திற்கு 3 பேரும் சென்றுள்ளனர். அங்கிருந்த மாவட்ட செயலாளர் முகமது ரியாஸிடம், தகராறு செய்து தாக்கி, அலுவலகத்தில் இருந்த பொருள்களை உடைத்து சூறையாடியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து முகமது ரியாஸ் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் முகமது அபி வக்காஸ் (23), முகமது ஆசிக் (23) இருவரை கைது செய்தனர். சவுகத் என்ற மன்சூர் அலியை தேடி வருகின்றனர்.