பெரியகுளம் அருகே புதைக்கப்பட்டிருந்த மங்களூர் இளைஞரின் சடலத்தை போலீஸார் திங்கள்கிழமை தோண்டியெடுத்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் டம்டம் பாறை அருகே சுமார் 34 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலத்தை கடந்த செப்.17 ஆம் தேதி தேவதானப்பட்டி போலீஸார் கைப்பற்றினர். பின்னர் வழக்குப் பதிந்து பிரேத பரிசோதனை செய்து, தேவதானப்பட்டி பகுதியில் புதைத்தனர்.
இந்த நிலையில் இறந்தவர், கர்நாடக மாநிலம், மங்களூரைச் சேர்ந்த சேக் ஹம்ஷா மகன் முகமது சமீர் (34) என்றும், வெளிநாட்டில் வேலை செய்து வந்ததவர் என்பதும் தெரியவந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த நிலையில் அவரைக் காணவில்லையாம். அவருக்கு மனைவி, குழந்தை உள்ளனர். இதனையடுத்து பெரியகுளம் அருகே அவரது சடலம் மீட்கப்பட்டது தெரியவந்ததும், உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் முகமது சமீர் தான் என்பதை உறுதிசெய்தனர்.
இந்நிலையில், போலீஸார் தேவதானப்பட்டியில் புதைக்கப்பட்ட முகமதுசமீரின் உடலை திங்கள்கிழமை தோண்டியெடுத்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.