போடியில் செவ்வாய்க்கிழமை, அனல் பறந்த பிரசாரத்திற்குப் பின் பலத்த மழை பெய்தது. புதன்கிழமையும் மழைபெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
போடியில் செவ்வாய்க்கிழமை மாலை அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. மேள, தாளங்கள், ஆட்டம் பாட்டத்துடன் நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்திற்குப் பின், போடி நகர் முழுவதுமே அமைதியானது. இந்நிலையில், போடி பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது.
போடி நகர் பகுதிகளிலும் மலை கிராமங்களிலும் மூன்று மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. பிள்ளையார் அணை பகுதியில் தண்ணீர் கொட்டியது.
புதன்கிழமை பகலில் போடி குரங்கணி மலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மலை கிராமங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிரமத்துடன் கொண்டு செல்லப்பட்டன.
புதன் கிழமை மாலையில் போடி நகர் பகுதியில் லேசான மழை பெய்தது. அனல் பறக்கும் பிரசாரம் ஒருபுறம், கோடை வெயில் ஒரு புறம் என வாடிய மக்கள் பரவலான மழை பெய்ததால் மகிழ்ச்சி
அடைந்தனர்.