தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பையில் மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக் கொலை செய்தவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கோம்பை அமுல்நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(55). இவரது மனைவி பழனியம்மாள்(49). இருவரும் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தனர். கடந்த 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கச் சொந்த ஊருக்கு வந்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை பண்ணைப்புரம் - பல்லவராயன்பட்டி சாலையில் மணிகண்டன் தனியாக நடந்து வந்துள்ளார். அச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், மணிகண்டனை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் முன்னுக்கு பின் முரணாக அவர் பதில் கூறவே, போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், தனது மனைவி பழனியம்மாளின் நடத்தை சரியில்லாததால் அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி அவரது மாமியார் முத்தம்மாளையும் (70) அரிவாளால் வெட்டிக் கொன்றதாகத் தெரிவித்துள்ளார்.
மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸார் பார்த்த போது, பழனியம்மாளும், முத்தம்மாளும் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.
இது குறித்து கோம்பை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சடலங்களை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கோம்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.