தேனி அருகே சருத்துப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.1,000 நிதி உதவியை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் வழங்கினார்.
லட்சுமிபுரம்- சருத்துப்பட்டி, எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் பொன்னையன் (75). இவரது மனைவி கம்மாளச்சி. இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. பொன்னையன், கம்மாளச்சி ஆகியோர் விவசாய கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீர்-புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படைப் பிரிவைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்த செய்தியை பொன்னையன் வானொலியில் கேட்டுள்ளார்.
இதையடுத்து அவரும், அவரது மனைவியும் தங்களது உழைப்பின் மூலம் சேமித்து வைத்திருந்த ரூ.1,000-ஐ, பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்க முடிவு செய்தனர். இதன்படி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், அந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியாக ரூ.1,000-ஐ ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் பொன்னையன் வழங்கினார்.