தேனி மாவட்டம், கம்பம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் சந்தை குறித்த கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் சத்தியராய் தலைமை வகித்தார். விற்பனைக்குழு செயலாளர் பால்ராஜ் , வேளாண்மை அலுவலர் சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வேளாண்மை உதவி இயக்குநர் ரா.சுரேஷ் கலந்து கொண்டு பேசியது: விவசாயிகளின் வாழ்வாதாரம், இடைத்தரகர்களின் பிடியிலிருந்து மீட்கும் வகையிலும், மத்திய அரசு "இ-நாம்' மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கியது. இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து, நாடு முழுவதும் 585 இடங்களில் "இ - நாம்' சந்தை வசதி உள்ளது. தமிழகத்தில் 285 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 23 இடங்களில் மின்னணு திட்டம் செயல்படுகிறது. 2017இல் கம்பத்தில் தொடங்கி, நெல், வெள்ளைச்சோளம், கம்பு, எள் மற்றும் மக்காச்சோளம் என 834.60 மெட்ரிக் டன் அளவும், ஒரு கோடியே 23 லட்சத்து 97 ஆயிரத்து 365 ரூபாய் மதிப்புள்ள விவசாய விளைபொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். "இ - நாம்' சேவை குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. வட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியபாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கண்காணிப்பாளர் சுமதி வரவேற்றார்.