ஆண்டிபட்டி பேருந்து நிலைய வணிக வளாகக் கட்டடத்தின் மேல் பகுதியில் மரங்கள் வளர்ந்து வருவதால், கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேருந்து நிலைய வளாகத்தில் பேரூராட்சி நிர்வாகம் மூலம் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் பல்வேறு கடைகளும், கழிப்பறையும் செயல்பட்டு வருகின்றன. இந்த கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளான நிலையில், போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து வருகிறது.
குறிப்பாக, கட்டடத்தின் மேற்கூரையில் அரசமரம் உள்ளிட்ட பல்வேறு செடிகள் வளர்ந்து வருவதால், கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழை பெய்தால் நீர் கசிந்து கட்டடத்தின் உள்பகுதிகளில் விழுவதாக வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்தக் கட்டடத்தை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேபோன்று, ஆண்டிபட்டி நகரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள பல வணிக வளாகங்கள் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து வருவதாக புகார்கள் கூறப்படுகின்றன.