சின்னமனூர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் சரிசெய்யப்படாமல் இருப்பதால் தண்ணீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குச்சனூர் முல்லைப் பெரியாற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறு மூலம், சங்கராபுரம், தருமத்துப்பட்டி, வெம்பக்கோட்டை, கோணாம்பாட்டி, தம்மிநாயக்கன்பட்டி, சமத்துவபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி என 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், குச்சனூர்-சங்கராபுரம் இணைப்பு சாலையில் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, பல மாதங்களாக குடிநீர் வீணாகி வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால், கிராமங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பல மாதங்களாக குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சுகாதாரமற்ற குடிநீரை விநியோகம் செய்வதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தற்போது, குடிநீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பல மாதங்களாக வீணாகி வருவதை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள்கண்டு கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
எனவே, இதை உடனடியாக சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.