தேசிய அளவிலான மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்ற 2 நாள் கருத்தரங்கம் காரைக்கால் என்.ஐ.டி.யில் புதன்கிழமை தொடங்கியது.
காரைக்காலில் இயங்கிவரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி) வேதியியல் துறை சார்பில் சமீபத்திய மேம்படுத்தல்களால் விளையும் நன்மைகள் குறித்து விவாதிக்கும் நானோ தொழில்நுட்பம் குறித்த 2 நாள் கருத்தரங்கம் தொடங்கியது. இதில் தேசிய அளவில் 90 மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நிறுவனத்தின் இயக்குநர் கே.சங்கர நாராயணசாமி கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசும்போது, இதுபோன்ற கருத்தரங்கு முதல் முறையாக இங்கு நடைபெறுகிறது. நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து விவாதிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளோரை பாராட்டுகிறேன். இங்கு விவாதிக்கப்படும் பொருள்கள் மனித சமுதாயத்துக்கு நல்ல பயனைத் தரும் என்றார். சிறப்பு அழைப்பாளராக காரைக்குடி மத்திய மின் வேதியியல் மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் கே. விஜய மோகனன் பிள்ளை பேசினார்.
முன்னதாக, வேதியியல் துறையின் துணைப் பேராசிரியரும், கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளருமான தா.ரகுபதி கருத்தரங்கின் நோக்கம் குறித்துப் பேசினார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள் நானோ தொழில்நுட்பத்தில் சமீபத்திய வளர்ச்சி குறித்தும் அதனால் விளையும் நன்மைகள் குறித்தும் பேசினர்.
தொடக்க நிகழ்ச்சியின் நிறைவாக கட்டடத் துறைத் தலைவர் மாடப்பா நன்றி கூறினார். இந்தக் கருத்தரங்கம் வியாழக்கிழமையும் நடைபெறுகிறது. இதில் 30 பேர் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து உரையாற்றுகின்றனர். சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்து பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.