காரைக்கால் அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளியின் என்.சி.சி. அமைப்பு சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் குப்பைகளைத் தரம் பிரித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக பள்ளியின் என்.சி.சி. மாணவர்கள் பள்ளி வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மேலும், பொதுமக்கள் கூடியிருந்த பகுதிகளில், குப்பைகளைப் பயன்படுத்தி உரம் தயாரிப்பதற்கு ஏதுவாக, மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என எவ்வாறு தரம் பிரிப்பது என செயல்விளக்கம் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் ஏ. பாலசுப்ரமணியன், ராணுவ பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி என்.சி.சி. அதிகாரி எல். ரமேஷ்குமார் செய்திருந்தார்.