காரைக்காலில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
காரைக்கால் நேரு மார்க்கெட் கட்டட கட்டுமானப் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களில், கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த அஜய் என்கிற ராமச்சந்திரன் (19) என்பவரும் ஒருவர். இவர் செவ்வாய்க்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு திரும்பும்போது, அங்கிருந்த கம்பி ஒன்றை பிடித்தாராம். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு காயம டைந்தார். அருகிலிருந்தோர் அவரை காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காரைக்கால் நகர காவல்நிலைய ஆய்வாளர் ஏழுமலை, உதவி ஆய்வாளர் மோகன் ஆகியோர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கட்டடப் பணியின்போது தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்பது தெரியவந்தது. கவனக்குறைவாக செயல்பட்டதால் பணி மைய பொறுப்பாளர் கன்னியாகுமரியைச் சேர்ந்த எட்வின்ஜார்ஜ் (25), உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (26) ஆகிய 2 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.