காரைக்காலில் உள்ள பெருமாள் கோயில்களில் திருவோணத்தையொட்டி, கம்ப தீபம் ஏற்றும் வழிபாடு வெள்ளிக்கிழமை (செப்.21) நடைபெறுகிறது.
புரட்டாசி மாதம், திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் கோயில்களில் பெரிய திருவோணமாக கம்ப தீபம் ஏற்றும் வழிபாடு வழக்கத்தில் இருந்து வருகிறது. காரைக்காலில் பிரசித்தி பெற்ற நித்யகல்யாணப் பெருமாள் கோயில், கோயில்பத்து கோதண்டராமர் பெருமாள் கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில்களில் விமரிசையாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனமும், 11 முதல் 12 மணிக்குள்ளாக கம்ப தீபம் ஏற்றும் வழிபாடும் நடைபெறுகிறது.
திருமலைராயன்பட்டினம் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் மா விளக்கிட்டு கம்ப தீபத்தின்போது வழிபாடு நடத்துவது வழக்கத்தில் இருந்துவருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில்களின் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை (செப்.22) வழிபாடாக காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சயன நிலை கொண்டிருக்கும் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படவுள்ளது.
இதேபோல், கோயில்பத்து கோதண்டராமர் பெருமாள் கோயிலிலும் உத்ஸவருக்கு வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில், புரட்டாசி சனிக்கிழமைகளில் அலங்காரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.