ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை உள்ளாட்சி ஓய்வூதியதாரர்களுக்கு அமல்படுத்த வலியுறுத்தி பிப்ரவரி 21-ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஓய்வூதியதாரர்கள் நலச் சங்க பொதுக் குழு கூட்டம் சங்கத் தலைவர் ரகுநாதன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தீர்மானங்கள்: 7- ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை உள்ளாட்சி ஓய்வூதியதாரர்களுக்கும் அமல்படுத்த வேண்டும், மாதந்தோறும் காலதாமதமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வூக்குப்பின் அளிக்கவேண்டிய பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். அரசு துறை ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதுபோல் மருத்துவப்படி ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
உள்ளாட்சி ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்திற்கென அரசு பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கி, அரசே நேரடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வுபெற்று செல்லும் நாளிலேயே ஓய்வூதியப் புத்தகம் வழங்க வேண்டும். அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்குவதுபோல் மூத்த குடிமகன் என்ற அடையாள அட்டையை உள்ளாட்சி ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டும். அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அமல்படுத்தியுள்ள மருத்துவக் காப்பீடு திட்டத்தை உள்ளாட்சி ஓய்வூதியதாரர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சங்கப் பொருளாளர் கோதண்டராமன், இணைச் செயலாளர் புருஷோத்தமன் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கௌரவத் தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் ஐயப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். சங்கச் செயலாளர் வெங்கடாசலம் வரவேற்றார். ஆண்டறிக்கையை சங்க துணைத் தலைவர் ஜெயராமன் வாசித்தார். சங்க கெளரவ ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.