நெடுங்காடு தொகுதியில் வடமட்டம் கிராமத்தில் நடைபெற்ற ஒரு வார கால நாட்டு நலப்பணித் திட்ட முகாம் சனிக்கிழமை நிறைவுபெற்றது.
காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், நெடுங்காடு பகுதி வடமட்டம் கிராமத்தில் ஒரு வார கால நாட்டு நலப்பணித் திட்ட சேவை முகாம் நடைபெற்றது.
இந்த கிராமத்தில் சாலைகளை தூய்மை செய்தல், மக்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கருவேல மரங்கள் அகற்றம், எய்ட்ஸ் குறித்து விழிப்புணவு, பேரிடர் மேலாண்மை குறித்து தகவல்கள் அளிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மாணவர்கள் 65 பேர் ஈடுபட்டனர். வடமட்டம் சமுதாயக் கூடத்தில், பல்வேறு துறை வல்லுநர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் ஒவ்வொரு நாளும் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
தினமும் கிராம மக்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டதோடு, கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. முகாம் நிறைவையொட்டி சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு போட்டியில் வெற்றிபெற்ற கிராமத்தினருக்கு பரிசுகளும், முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழையும் வழங்கினார்.
மாணவர்களின் சேவைகளை நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமணபதி பாராட்டிப் பேசினார். முகாம் ஏற்பாடுகள் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கதிர்வேலு சம்பந்தன் செய்திருந்தார்.