அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் குரங்குகளைப் பிடிக்க கூண்டு வைப்பு

மாணவியரின் பாதுகாப்புக்காக மகளிர் கல்லூரி வளாகத்தில் குரங்குகளைப் பிடிக்க வனத்துறை நிர்வாகம் கூண்டு வைத்துள்ளது.


மாணவியரின் பாதுகாப்புக்காக மகளிர் கல்லூரி வளாகத்தில் குரங்குகளைப் பிடிக்க வனத்துறை நிர்வாகம் கூண்டு வைத்துள்ளது.
காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி டாக்டர் அம்பேத்கர் வீதியில் அமைந்துள்ளது. கல்லூரியில் 1,500 மாணவியர் பயின்று வருகின்றனர். கட்டடத்தில் குரங்குகள் நடமாட்டம் மிகுதியாக காணப்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குரங்கு விரட்டியதில் கல்லூரி மாணவி ஒருவர் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். 
இதையொட்டி, கட்டடத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனினும் கடந்த சில மாதங்களாக இக்கல்லூரி கட்டடத்தில் குரங்குகள் நடமாட்டம் ஏற்பட்டிருப்பது, மாணவியரிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், வகுப்பறையில் மாணவியர் வைத்திருக்கும் உணவை சேதப்படுத்திவிட்டுச் சென்றுவிடுவதாகவும் புகார் எழுந்தது.
மாணவியரின் பாதுகாப்புக்குரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கல்லூரி வளாகத்தில் குரங்குகள் நடமாட்டம் இல்லாத வகையில், அதை பிடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காரைக்கால் வனத்துறை நிர்வாகத்தினர், கல்லூரியின் கட்டடத்தில் குரங்கு சிக்கிக்கொள்ளும் வகையிலான கூண்டு வைத்துள்ளனர். கூண்டுக்குள் வாழைப்பழத்தை வைத்திருக்கின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, நிச்சயமாக கூண்டில் குரங்குகள் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. பிடிக்கப்படும் குரங்குகள், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொண்டுவிடப்படும் என தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com