பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை நிறைவேற்றித் தருமாறு அமைச்சரிடம் வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் வலியுறுத்தினர்.
காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக தொகுப்பூதிய பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்தோர், புதுச்சேரி வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணனை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்து, தங்களது பணி நிரந்தரம் குறித்து அமைச்சரிடம் பேசினர்.
இச்சந்திப்பு குறித்து பணியாளர்கள் தரப்பில் கூறியது:
காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், புதுச்சேரி அரசின் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு பெற்று கடந்த 10 ஆண்டுகளாக தொகுப்பூதிய நிலையில் பணியாற்றி வருகிறோம்.
தொகுப்பூதியம் என்பது மிகக் குறைந்த அளவிலேயே கிடைக்கிறது.
எங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், ஊதியத்தை உயர்த்தித் தரவேண்டும், புதுச்சேரி அரசு சரியான தீர்வை விரைவாக காணவேண்டுமென பலகட்டங்களாக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். தற்போது சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரை சந்தித்து விரிவாக கோரிக்கையை விளக்கிக் கூறினோம்.
இரண்டு வாரத்துக்குப் பின் புதுச்சேரியில் சங்கப் பிரதிநிதிகள் வந்து சந்திக்குமாறும், புதுச்சேரி முதல்வருடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார் என்றனர்.