நாகை உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டீ. அன்பழகன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
நாகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் தரமற்ற கலவை சாதங்கள் விற்பனை செய்யப்படுவதாக கட்செவி மூலம் தகவல் வெளியானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நாகை மாவட்டம், உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் செல்வராஜ் உத்தரவின்பேரில் நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டீ. அன்பழகன் வியாழக்கிழமை சிறிய வகை உணவகங்களுக்குச் சென்று, விற்பனைக்கு தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளை ஆய்வு செய்தார்.
அப்போது, உணவுகள் அனைத்தும் தரமானதாக இருந்தது தெரியவந்தது. கட்செவியில் வெளியான செய்தி தவறானது எனத் தெரியவந்ததையடுத்து, நடவடிக்கை மேற்கொள்ளாமல் உணவகங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ள உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.