வேதாரண்யம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம் அருகே உள்ள கோவில்பத்து மன்மதன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கைலாசம் மகன் கைலாராஜன் (40). பட்டதாரி ஆசிரியரான இவர், கீழையூர் ஒன்றியம் காரப்பிடாகை அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். கோவில்பத்து கிராமத்தில் இவருக்கு சொந்தமான நிலத்துக்கு அருகே உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தின் பக்கவாட்டில் அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி நாகூரான் என்பவர் கூரை கொட்டகை அமைத்து பயன்படுத்தி வந்தார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் கைலாராஜன் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, நீதி மன்ற உத்தரவின்பேரில் 2017-இல் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதோடு, அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த புறம்போக்கு நிலத்தை ஆசிரியர் கைலாராஜன் ஆக்கிரமித்ததாகக் கூறப்படுறது. இதுகுறித்து, வேதாரண்யம் வட்டாட்சியர் ஸ்ரீதர் பரிந்துரையின்பேரில் அந்த பகுதிக்கான கிராம நிர்வாக அலுவலர் ஜெய்சங்கர், வேடைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் வேம்பரசி, உதவி ஆய்வாளர் பசுபதி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில், ஆசிரியர் கைலாராஜன், அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.