நாகை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் ரூ. 396 கோடியில் கதவணை அமைக்க அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு பாஜக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பாஜக தேசியக்குழு உறுப்பினரும், மத்திய அரசு வழக்குரைஞருமான கே. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொள்ளிடத்தில் தடுப்பணைகள் இல்லாததால் ஆண்டுதோறும் பல லட்சம் கனஅடி வெள்ளநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. கொள்ளிடம் ஆற்று நீரை சேமிக்கும் வகையில், நாகை மாவட்டம் குமாரமங்கலம் அருகே கதவணை கட்ட வேண்டும் என பொதுநல வழக்குத் தொடரப்பட்டதை தொடர்ந்து, ரூ. 400 கோடியில் கொள்ளிடத்தில் கதவணை அமைக்கப்படும் என கடந்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இருப்பினும், அப்பணி தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டதால், மீண்டும் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்ததன் அடிப்படையில், 2017-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு இத்திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.31 கோடியை ஒதுக்கீடு செய்து, கதவணை அமைக்க நிலம் கையகப்படுத்த உத்தரவிட்டது. ஆனாலும், பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.396 கோடியில் கொள்ளிடத்தில் கதவணை அமைக்கப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், நாகை மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக முதல்வருக்கு பாஜக மற்றும் விவசாயிகள் சார்பில் நன்றி. கதவணை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.