வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நவ. 15-ஆம் தேதி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 77 பேர் திங்கள்கிழமை இரவு நாகை வந்தனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக மாறி நவ. 15-ஆம் தேதி கடலூருக்கும், பாம்பனுக்குமிடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கட்டுப்பாட்டின்கீழ் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 77 பேர், துணை கமாண்டன்ட் பி. வைரவநாதன் தலைமையில், உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் நாகைக்கு வந்துள்ளனர்.
திங்கள்கிழமை இரவு நாகப்பட்டினத்துக்கு வந்த இக்குழுவினர், வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, கல்லூரி வாளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்களை அவர் பார்வையிட்டார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வ. முருகேசன், காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார், தேசிய பேரிடர் மீட்புப்படை துணை கமாண்டன்ட் பி. வைரவநாதன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வக்குமார், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் தமிமுல் அன்சாரி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.