புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளில், அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :
நாகை மாவட்டத்தில் கஜா புயல் சீற்றத்தால் பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதுடன், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மக்கள் பாதிப்புகளிலிருந்து விடுபடத் தேவையான நடவடிக்கைகளை அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும். புயல் சீற்றத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் நிவாரணத் தொகையை அரசு அறிவிக்க வேண்டும். உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஓ.எஸ். மணியன், புயல் சீற்றத்தால் மாவட்டத்தில் பெரிய பாதிப்புகள் இல்லை என்பதைப் போன்று தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்து, மக்களின் கோபத்துக்கு ஆளாகி வருகிறார்.
புயலையொட்டி மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நான் பாராட்டினேன். ஆனால், தற்போது பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை. மக்களை பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் மு.க. ஸ்டாலின்.