கார்த்திகை மாதப் பிறப்பு: சீர்காழி கோயிலில் கோ பூஜை வழிபாடு: அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி, சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கோ பூஜை வழிபாடு மற்றும் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி சனிக்கிழமை நடைபெற்றது.

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி, சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கோ பூஜை வழிபாடு மற்றும் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி சனிக்கிழமை நடைபெற்றது.
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சட்டைநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீசுவரர் சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்து விநாயகருக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு மற்றும் கன்றுக்கு வஸ்திரம், மாலைகள் அணிவித்து சிறப்பு  வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் பசு, கன்று ஆகியவற்றின் மீது மஞ்சள், குங்குமம் வைத்து வலம் வந்து மலர்கள் தூவி வழிபட்டனர். இதில் கோ பூஜை வழிபாட்டுக் குழு பக்தர்கள் திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரியும் நடைபெற்றது. இதையொட்டி மேள, தாளங்கள் முழங்க பிரம்ம தீர்த்தக் குளத்துக்கு எழுந்தருளிய அஸ்திர தேவருக்கு மஞ்சள், திரவியப் பொடி, பால், தயிர், சந்தனம் முதலான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி கொடுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com