சீர்காழி பகுதியில் கஜா புயலால் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கும் பணி சனிக்கிழமை தீவிரமாக நடைபெற்றது.
கஜா புயல் தாக்கத்தில் சீர்காழி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், 600-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. சீர்காழி பகுதியில் கிராமங்கள் மற்றும் வயல்வெளிகளில் இருந்த மின்கம்பங்கள் அதிகளவு சாய்ந்ததால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. நகரில் மின்விநியோகம் 12 மணி நேரத்தில் வழங்கப்பட்டது.
இதேபோல், எடமணல், வருஷபத்து, தற்காஸ், பழையார், தாண்டவன்குளம், ஆரப்பள்ளம், பழையபாளையம், மாதானம், சஞ்சீவிராயன்கோயில், கொடக்காரமூலை, வேட்டங்குடி, அகரவட்டாரம், திருநகரி, நாயக்கர்குப்பம், தென்னாம்பட்டினம், கோணயாம்பட்டினம், மணல்மேடு, மானாந்திருவாசல், பட்டவர்த்தி, தலைஞாயிறு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மின்விநியோம் வழங்க சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை 80 சதவீதம் நிறைவடைந்து, பெரும்பாலான கிராமங்களுக்கு மின்விநியோகம் வழங்கப்பட்டது.
மேலும், சனிக்கிழமை இரவுக்குள் பணிகள் நிறைவடைந்து அனைத்து கிராமங்களுக்கும் முழுமையாக மின்விநியோகம் வழங்கப்பட்டுவிடும் என சீர்காழி கோட்ட மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.