நாகையில் கஜா புயலால் சேதமடைந்த மின்மாற்றி சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் மின் விபத்தில் சிக்கி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், கோகூர், அய்யனார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் சு. சண்முகம் (42). மின்வாரிய ஊழியரான இவர், வெள்ளிக்கிழமை இரவு நாகை பெருமாள் வடக்கு வீதியில், கஜா புயல் சீற்றத்தால் சேதமடைந்த மின் மாற்றியில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மின் விபத்துக்குள்ளான சண்முகம், மின்கம்பத்திலிருந்து கீழே வீசப்பட்டார். இதில், பலத்தக் காயமடைந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து நாகை நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.